மாறாமை
என் வார்த்தை வெளிப்பட்டால்
நான், வாயாடி!
என் உடன் போக்கால்
நான், ஓடுகாலி!
மணக்கூலி கொடுக்க
முடியாதெனில் நான், முதிர்கன்னி!
என் கழுத்தில் தாலியால்
நான், கட்டுக் கழுத்தி!
பிள்ளை பெற முடியாதெனில்
நான், மலடி!
உடையவன் ஒதுக்கி வைத்தால்
நான், வாழாவெட்டி!
வேற்றானிடம் வாய்விட்டுப்
பேசினால் நான், வேசி!
மணவாளன் மாண்டு போனால்
நான், முண்டச்சி!
இல்லத்தான்
இருந்து இறந்தால்
நான், சுமங்கலி!
மாறாச் சமூகத்தில்
என்றும் மாறாதது
எனக்கான அடைமொழிகள்!
கவிஞர் ம.பாலன்
புதுச்சேரி
No comments:
Post a Comment