ஒற்றை நடசத்திரமே...
கோடி கோடி நட்சத்திரங்கள்
கண்களை சிமிட்டி மிளிர்ந்தாலும்
இரவு வானத்தை அழகுப்படுத்தினாலும்
உனக்கு அவை ஈடாகவே ஆகாது.
தெளிந்த இரவு வானத்தை
அண்ணாந்து பார்க்கும் பொழுதெல்லாம்
என் கண்கள் உன்னை மட்டும்
தேடுகின்றன, வாடுகின்றன, கலங்குகின்றன.
நிலவு முழுதாய் அங்கே இருந்தாலும்
தேய்ந்து வளர்ந்து மறைந்தாலும்
அதன் சுவடு மட்டுமே இருந்தாலும்
நீ மட்டும் அதன் அருகில் இருப்பாய்!
உன் அன்பை என்னவென்பது?
காத்திருத்தல் என்பதா? கடும்தவம் என்பதா?
கிடைக்காமலேயே போனாலும் தளராத
மனமென்பதா? மாசில்லா அன்பென்பதா?
எத்தனை யுகங்கள் காத்திருக்கிறாய்
அந்த நிலவின் அன்பிற்காக?
எத்தனை முயற்சிகள் செய்திருப்பாய்
அதன் அன்பை அடைந்துவிட!
காத்திருத்தலில் நீ ஆண்டாளா? மீராவா?
அவர்கள் ஆண்டவனில் அடைக்கலம்!
அதுபோல
நீயும் ஒருநாள் அந்த நிலவை அடைய
நானும் உனக்காக தவமிருப்பேன் நட்சத்திரமே.
கவிஞர் சாந்தி ராபர்ட்ஸ்
ஊட்டி
No comments:
Post a Comment