Saturday, January 23, 2010

திருநங்கை

ஆண்பாலிலும் அகப்படவில்லை
பெண்பாலிலும் பொருத்தமில்லை
அரவாணி என ஆகிவிட்டதால்
அரவணைக்கக் கூட யாருமில்லை

விலங்கு, பறவை
தாவரம் மனிதரென‌
அனைத்தும் அடையாளப்
பெயர் பெற்று அடைகின்றது கௌரவமே!
நாங்கள் மட்டும்
அடையாளம் காணாத‌
ஆச்சர்யக் குறியானோம்

அவலமே கண்டு கண்டு
அவனியிலே நொந்துவிட்டோம்
மனிதனையே மதிக்காத சமூகம்
மனிதனாகவே எண் ணாதவரையா மதிக்கும்?

குரோமோசோமின் குறும்பதுவால்
குழப்பமே வாழ்வானது
குனியக் குட்டும் சமுதாயத்தில்
மனமும் கூட தாழ்வானது

விதியை மீறிய விளையாட்டை
இயற்கை எப்படி ஈடுசெய்யும்?
விளக்க முடியா பதிலுக்கு
வினாக்குறியே விடையாகும்.

கவிஞர் இரா.சுமதி
தேனி

No comments:

Post a Comment